Published : 02 Sep 2017 08:29 PM
Last Updated : 02 Sep 2017 08:29 PM

ஜெயலலிதா இல்லாத தமிழகமும், அனிதாவின் மரணமும்: டாக்டர். ஜி.ரவீந்திரநாத் பேட்டி

நீட் என்ற மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு பெரும் தடையாக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு தமிழக அரசியல் சூழல் நிலையற்ற தன்மையை அடைந்துள்ளது.

நீட் விலக்கு வரும், வரும் என்று தமிழக ஆட்சியாளர்கள் மாணவர்களை கடைசி நிமிடம் வரை நம்பிக்கையூட்டி குழப்பினர்.

கடைசியில் நீட் அமலுக்கு வர பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களின் குரலாக உச்சநீதிமன்றத்தில் ஓங்கி ஒலித்த அனிதா தாக்குப்பிடிக்க முடியாமல் தற்கொலை மூலம் தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.

அனிதாவின் தற்கொலை பல வித எதிர்வினைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வீதிக்கு வந்து கோபத்துடன் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டன போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தனது மகளை பறிகொடுத்த அனிதாவின் தந்தையின் கதறல் ஒரு உண்மையை செவிட்டில் அறைந்தார் போல் உணர்த்தியுள்ளது. ஜெயலலிதா இருந்திருந்தால் என் மகள் உயிரிழந்திருக்க மாட்டார், அரசியல் போட்டியில் நீட் நுழைவுத்தேர்வை கொண்டு வந்து என் மகள் உயிரை பறித்து விட்டார்களே என்று கதறியது சில உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியது.

தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதிக்க மாட்டேன் தேவை ஏற்பட்டால் அதற்கென தனிச்சட்டம் கொண்டுவர தயங்க மாட்டேன் என்று 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா பேசினார்.

மாநில உரிமைகளில் கூட்டாட்சி தத்துவம் வேண்டும் என்று எதிர்த்த ஜெயலலிதா இன்று இருந்திருந்தால் நீட் வந்திருக்காது தன் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும் என்று அரியலூரில் உள்ள கூலித்தொழிலாளியான அனிதாவின் தந்தைக்கு தெரிந்திருக்கும் போது இது போன்ற தகவல் உண்மையா? ஸ்திரமற்ற ஒரு அரசு நீட் தேர்வை கொண்டு வந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டு எதிர்காலம் குறித்த கேள்விக்குறியுடன் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி அனிதாவின் முடிவு, ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்காது என்கிறார்களே?

ஜெயலலிதா இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் தூண்டுதலாக உறுதியாக சண்டையிட்டிருப்பார், அதற்கான தார்மீக பலமும் இந்த அரசுக்கு இருந்திருக்கும்.

கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு வர வேண்டும் என்பதை முதலமைச்சர்கள் மாநாட்டில் வலியுறுத்தி பேசியவர் ஜெயலலிதா. கூட்டாட்சி தொடர்பாக மாநில உரிமைகள் பறிக்கப்படுவது சரியல்ல என்பதை பதிவு செய்துள்ளார்.

கூட்டாட்சிக்கு எதிரான போக்கு உள்ளது என்பதையும் பதிவு செய்துள்ளார். இப்போது உள்ள பிரதமர் ஆட்சிக்கு வலிமையாக வந்த பின்னரும் அவர் துணிவாக இதை பதிவு செய்தார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அதிமுக பிளவுப்பட்டிருக்காது, அமைச்சர்களும் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள், இப்போதுள்ள கோஷ்டி அரசியல் வந்திருக்காது.

ஒத்தக்கருத்தாக அதிமுகவின் கருத்தாக வலிமையாக போயிருக்கும். ஜெயலலிதாவை பொறுத்தவரை தன் மேல் உள்ள வழக்கு குறித்து அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. கடைசி வரை மாநில உரிமைகள் சார்ந்த விஷயத்தில் என்றுமே ஜெயலலிதா சமரசம் செய்துக்கொண்டதில்லை.

அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் மாநில உரிமை சார்ந்த விஷயத்தை அவர் விட்டுகொடுத்ததில்லை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

நீட் வந்திருக்குமோ வராமல் போயிருக்குமோ தெரியாது ஆனால் கடைசிவரை ஜெயலலிதா தளராமல் உறுதியுடன் போராடி இருப்பார் என்பதை மறுக்க முடியாது.

தற்போது உள்ள அரசு செய்யவில்லை என்று சொல்கிறீர்களா?

இந்த அரசு பலகீனமடைந்த அரசு. பல கோஷ்டிகள் உருவாகிவிட்டது. அவர்கள் தங்களை தக்க வைத்துக்கொள்வதில் போராடுகிறார்கள், முழுமையாக தார்மீக உரிமையை இழந்திருக்கிறார்கள். இவர்கள் அடி பணிந்து போய் விட்டார்கள்,மத்திய அரசு சொல்வதை கேட்டு நடக்கும் நிலைக்கு தள்ளிப்போய் விட்டார்கள்.

நீட் விவகாரத்தில் மாநில அரசுகள் விரும்பினால் விலக்கு என்ற நிலை ஏன் உறுதியாக அமல் படுத்தப்படவில்லை?

பாராளுமன்ற குழு சொல்லியிருந்த போதும் இவர்கள் சட்டமாக கொண்டு வந்த போது அதை விட்டுவிட்டார்கள். இதை ஜெயலலிதா எதிர்த்தார். அப்போது நட்டா மாநில உரிமைகள் பாதிக்காது என்று உறுதி கொடுத்தார். ஆனால் அதை இவர்கள் தூக்கி போட்டுவிட்டார்கள். அந்த உறுதியை அமல்படுத்த வில்லை.

இவ்வாறு டாக்டர் ரவீந்திரநாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x