

சென்னை: கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் தேவி (33). பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிரணிச் செயலாளர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவுப் பணியில் இருந்த ஆர்.கே.நகர் காவல் நிலைய காவலர்கள் பாலாஜி, பரித் ராஜா, ஊர்க்காவல் படை வீரர் கிரண் ஆகியோர், கொருக்குப்பேட்டையில் உள்ள தேவியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். காவலர் பாலாஜி மட்டும் தேவியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது.
அப்போது வீட்டுக்குள் இருந்த தேவியின் கணவர் ஆனந்தகுமார், இதை தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக தேவியின் கணவர் ஆனந்த குமார், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில், காவலர்கள் அத்துமீறியது தெரியவந்தது. இதையடுத்து, காவலர்கள் பாலாஜி, பரித் ராஜா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். ஊர்க்காவல் படை வீரர் கிரண் எச்சரித்து அனுப்பப்பட்டார்.