சிலிண்டர்களின் விலையை உயர்த்தியது நடுத்தர, ஏழை மக்கள் மீதான தாக்குதல்: இந்திய கம்யூ.

சிலிண்டர்களின் விலையை உயர்த்தியது நடுத்தர, ஏழை மக்கள் மீதான தாக்குதல்: இந்திய கம்யூ.
Updated on
1 min read

சென்னை: எரிவாயு சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர், அதேப்போல் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மோடி அரசு மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. வீட்டு பயன்பாட்டு எரிவாயு விலை சிலிண்டருக்கு 50 ரூபாயும், வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு ரூ.350 உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை காத்திருந்து விட்டு தேர்தல் முடிந்தவுடன் விலையை உயர்த்தியிருப்பது மோசடியான செயல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கண்டிக்கிறது.

சென்னையில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1118.50-க்கும், உணவகங்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2268/-ஆக உயர்த்தியிருப்பது என்பது பொறுப்பற்ற நடவடிக்கை என்பதோடு, நடுத்தர, ஏழை மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

ஒன்றிய அரசின் மிக மோசமான சிலிண்டர் விலை உயர்வை வன்மையாகக் கண்டிப்பதுடன் திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in