Published : 02 Mar 2023 06:28 AM
Last Updated : 02 Mar 2023 06:28 AM
சென்னை: தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரியும், மீனவர்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: நகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் காயமடைந்தது தொடர்பாக நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. இந்த விவகாரம் உடனடியாக தூதரகம் வாயிலாக, இலங்கை அரசிடம் எடுத்துச் செல்லப்பட்டது.
மேலும், தாக்குதல் தொடர்பான விவரங்களை இலங்கை அரசிடம் இந்திய தூதரகம் கோரியுள்ளது. இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை கடிதம்: இதற்கிடையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அனுப்பியுள்ள மற்றொரு கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரகமதுல்லா என்பவர் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, உயிரிழந்த ரகமதுல்லாவின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT