Published : 14 Sep 2017 09:16 PM
Last Updated : 14 Sep 2017 09:16 PM
ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்குப் பாதகமான புதிய பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவது, அனைத்து ஊழியர்களுக்கும் வரையற்றுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது, நீட் தேர்வை ரத்துசெய்வது ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டம் வியாழக்கிழமை 4-வது நாளாக நீடித்தது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு இரவும் அங்கேயே உறங்குகிறார்கள்.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க பொதுக்குழுவில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தருவது என்று முடிவெடுத்துள்ளனர். இதனால் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் தலைமைச் செயலக ஊழியர்கள் சுமார் 4,500 பேர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT