திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு: கவுஸ் ஆதம்பாஷா ஜாமீன் மனு தள்ளுபடி

டாக்டர் மஸ்தான் | கோப்புப்படம்
டாக்டர் மஸ்தான் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: திமுக முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக முன்னாள் எம்,பி. டாக்டர் மஸ்தான் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது நெருங்கிய உறவினரான இம்ரான்பாஷா என்பவர் மஸ்தானிடம் டிரைவராக வேலை செய்து வந்தார். மஸ்தான் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், டாக்டர் மஸ்தான் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி அவரது மகன் காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சந்தேகத்தின் அடிப்படையில் கார் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், டாக்டர் மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது தம்பியான கவுஸ் ஆதம்பாஷாவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கவுஸ் ஆதம்பாஷா ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மஸ்தானின் மகன் ஹரிஸ் ஷாநவாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுராஜ், "டாக்டர் மஸ்தான் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தடய அறிவியல் துறை அறிக்கை தெரிவித்துள்ளது. குடும்ப பிரச்சினைக்காக அவரை கொலை செய்துள்ளனர். எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என்று வாதிட்டார்.

அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் வினோத், டாக்டர் மஸ்தான் மரணம் தொடர்பாக தடய அறிவியல் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in