Published : 12 Sep 2017 09:48 AM
Last Updated : 12 Sep 2017 09:48 AM
சாரண, சாரணியர் இயக்கத்தில் உள்ள நண்பர்கள் விரும்பி கேட்டுக்கொண்டதால் அதன் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் அவர் நேற்று கூறியதாவது:
எனது தந்தை ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் சாரண, சாரணியர் இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கும்மேல் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
அதனால், அந்த இயக்கத்தோடு சிறுவயது முதல் எனக்கு தொடர்பு உண்டு. நண்பர்கள் உண்டு. அந்த அடிப்படையில் சாரண, சாரணியர் இயக்கத்தில் உள்ள நண்பர்கள் விரும்பி கேட்டுக் கொண்டதால் அதன் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். என்னை தலைவராக்க முதல்வரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் கூட்டுச் சதி செய்வதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருக்கிறார். இந்தத் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். எனவே, இதில் சட்ட மீறல்கள் எதுவும் இல்லை.
சாரண, சாரணியர் இயக்கம் மூலம் பிஞ்சுகளின் மனதில் காவி நஞ்சை விதைக்க முயற்சிப்பதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரம் மூலம் தமிழகத்தில் பிரிவினைவாத, நாத்திகவாத கருத்துகளைப் பரப்பியவர்கள், பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருவதில் ஆச்சரியம் இல்லை. எனக்கு ஆதரவாக வாக்களிக்க கல்வி அதிகாரிகளை யாரும் மிரட்டவில்லை. அவர்களை யாரும் மிரட்டவும் முடியாது. சாரண, சாரணியர் இயக்க தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
சாரண,சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கு எச்.ராஜாவை எதிர்த்து போட்டியிடும் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் மணியிடம் கேட்டபோது, ‘‘பள்ளிக்கல்வித் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவன் என்ற முறையில் தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்கு போட்டிடுகிறேன். வேறு எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT