மணல் கடத்தல் வாகனங்களை மீட்க சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம் - உயர் நீதிமன்றம்

மணல் கடத்தல் வாகனங்களை மீட்க சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம் - உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

மதுரை: மணல் கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை மீட்க அதற்கான சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நெல்லை தருவைகுளத்தில் செயல்பட்டு வந்த கிரஷர் யூனிட்டில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி அங்கிருந்த இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கிரஷர் யூனிட் மூடப்பட்டது. இயந்திரங்களை திரும்ப தரவும், கிரஷர் யூனிட்டை திறக்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்பான வழக்குகளை வருவாய்த்துறை அல்லது போலீஸார் விசாரிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது என்றுகூறி இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுவாமிநாதன், தண்டபாணி, முரளிசங்கர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மணல் கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்வது தொடர்பான வழக்குகளை விசாரிக்க போலீஸாருக்கு அதிகாரம் இல்லை. இதனால் எங்கள் வாகனங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், மணல் கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்யும் வழக்குகளை விசாரிக்க போலீஸாருக்கு அதிகாரம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் பறிமுதல் வாகனங்களை திரும்ப பெற சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு மனு தாக்கல் செய்யும் போது அந்த மனு மீது முடிவெடுக்க 3 நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ள இந்த வழக்கிற்காக சிறப்பு நீதிமன்றம் காத்திருக்க வேண்டியதில்லை. சட்டப்படி உரிய உத்தரவு பிறப்பிக்கலாம். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in