

சென்னை: சென்னையில் உள்ள 3 பஸ் டிப்போக்களை பொதுமக்கள் - தனியார் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் வணிக வளாகமாக மாற்ற மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு ரூ.1543 கோடி செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 30-க்கும் மேற்பட்ட பேருந்து டிப்போக்கள் உள்ளன. இவற்றில் இருந்து தினசரி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 3 பஸ் டிப்போக்களை மேம்படுத்த மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி திருவான்மியூர் பஸ் டிப்போ ரூ.446 கோடி மதிப்பிலும், வடபழனி பஸ் டிப்போ ரூ.610 கோடி மதிப்பிலும், வியாசர்பாடி பஸ் டிப்போ ரூ.485 கோடி மதிப்பிலும் நவீன மயமாக்கப்படள்ளது. குறிப்பாக, பல்வேறு வசதிகளுடன் கூடிய வணிக வளாகமாக மாற்றப்படவுள்ளது.
பொதுமக்கள், தனியார் பங்களிப்பு என்ற முறையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநகர் போக்குவரத்துக் கழகம் டெண்டர் கோரியுள்ளது. இதன்படி, தரைத் தளம் மற்றும் முதல் தளம் பேருந்துகளை நிறுத்துவதற்கான இடமாக பயன்படுத்தப்படும். 2-வது தளம் பேருந்து டிப்போ மற்றும் வணிகக் கடைகள் இருக்கும் தளமாக இருக்கும். மீதம் உள்ள தளங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் உள்ள தளமாக அமைக்கப்படும். இவற்றில் தியேட்டர், உள் அரங்க விளையாட்டுகள், கூட்ட அரங்கம் ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.