Published : 01 Sep 2017 07:34 PM
Last Updated : 01 Sep 2017 07:34 PM
நீட் தேர்விலிருந்து நாம் விலக்கு பெறுவதே மாணவி அனிதா தற்கொலைக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு விலக்கு அளிப்பதற்காக தமிழக சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுக் கொடுக்க வில்லை. நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழக மாணவர்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகினர்.
இவ்வாறு பாதிப்புக்கு உள்ளான மாணவர்களில் ஒருவர் அனிதா. அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்கு மத்திய அரசும்,மாநில அரசும் பொறுப்பேற்க வேண்டும்.
அனிதாவிற்கு , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தனது அஞ்சலியை செலுத்துகிறது.
நீட் நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தர விலக்குப் பெறவும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை ,தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கிடவும் உரிய சட்டத்தைக் கொண்டுவருவதுமே ,அனிதாவிற்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்'' என்று ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT