Last Updated : 27 Feb, 2023 06:33 AM

 

Published : 27 Feb 2023 06:33 AM
Last Updated : 27 Feb 2023 06:33 AM

ஜூன் மாதத்துடன் ஓய்வுபெறும் சைலேந்திர பாபு: சட்டம் - ஒழுங்கு டிஜிபி பதவிக்கு சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் கடும் போட்டி

சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: வரும் ஜூன் மாதம் டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்குடிஜிபி பதவியைப் பெற சென்னைகாவல் ஆணையர் சங்கர் ஜிவால், முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு டிஜிபி என்பது முக்கியப் பொறுப்பாகும். காவல் துறையில் அதிக அதிகாரம் கொண்டது இந்தப் பதவி. பிற பிரிவுடிஜிபிக்கள் உள்பட அனைத்து அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்தும் அவர் ஒப்புதல் அளித்த பிறகே நடைமுறைக்கு வரும்.

தமிழக முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் காவல் துறை உள்ளதால், தினமும் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக முதல்வரிடம் நேரடித் தொடர்பில் இருக்கலாம். இதனால், ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரியும் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வுபெற வேண்டுமென்று விரும்புவர்.

இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திர பாபுவின் பதவி நீட்டிப்புக் காலம் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய டிஜிபியை நியமிப்பதற்கான பேனலை 3 மாதங்களுக்கு முன்னதாகவே தமிழக அரசு தயாரிக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில், தகுதியுள்ள முதல் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர்களை தேர்வுசெய்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

உள்துறை அமைச்சகம்: அதில் 3 பேரை உள்துறை அமைச்சகம் தேர்வு செய்யும். அவர்களில் ஒருவரை தமிழக அரசு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பணியில் அமர்த்தும். அந்த வகையில் 5 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சீனியாரிட்டி அடிப்படையில் 1988-ம் வருட தமிழக பேட்ச் அதிகாரி சஞ்சய் அரோரா, 1990 பேட்ச் அதிகாரிகளான சங்கர் ஜிவால் (சென்னை காவல் ஆணையர்), ஏ.கே விஸ்வநாதன் (முன்னாள் ஆணையர்), ஆபாஷ் குமார், சீமா அகர்வால், 1991 பேட்ச் அமரேஷ் புஜாரி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். சஞ்சய் அரோரா டெல்லி காவல் ஆணையராக இருப்பதால், அவர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பில்லை.

1988-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி கந்தசாமி வரும் ஏப்ரலுடன் பணிஓய்வு பெறுகிறார். 1989-ம் ஆண்டுஅதிகாரிகளான பிரமோத் குமார் அயல் பணியாக மத்திய அரசுப் பணிக்கு சென்றுவிட்டார்.

அடுத்த இடத்தில் உள்ளராஜேஷ் தாஸ், பி.கே.ரவி ஆகியோரும் இந்த ஆண்டு டிசம்பருடன் ஓய்வு பெறுகின்றனர். சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக வேண்டும் என்றால் குறைந்தது ஒரு வருடம் சர்வீஸ் மீதம் இருக்கவேண்டும். இதனால், இவர்களுக்கும் தலைமை டிஜிபி வாய்ப்பு இல்லை.

எனவே, அதற்கு அடுத்த இடத்தில் உள்ள சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோருக்கிடையே நேரடிப் போட்டி நிலவுவதாக காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்பட்ட பிறகு சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையர்களும், உளவுத் துறை, நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபிகளும் மாற வாய்ப்புள்ளது. எனவே, அந்தப் பதவிகளுக்கும் போட்டி நிலவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x