Published : 26 Jul 2014 01:55 PM
Last Updated : 26 Jul 2014 01:55 PM

எல்எல்பி பயின்றவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்யக்கோரி வழக்கு: பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

35 வயதுக்குப் பின் எல்எல்பி படித்தவர்களையும், குற்ற வழக்கு நிலுவையில் உள்ள சட்ட பட்ட தாரிகளையும் வழக்கறிஞர்களாக பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக தலைமை செயலர், இந்திய பார் கவுன்சில், தமிழக பார் கவுன்சில் தலைவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி தமிழ்நாடு லா சேம்பர் பொதுச் செயலர் பி.ஆர்.கே. ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

35 வயதுக்கு மேற்பட்டு சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து எல்.எல்.பி படித்தவர்களையும், குற்ற வழக்கு நிலுவையில் உள்ளவர்களையும் வழக்கறிஞர்களாக பதிவு செய்ய தமிழ்நாடு மாநில பார் கவுன்சில் மறுத்து வருகிறது. இந்திய பார் கவுன்சில் அங்கீகரித்த சட்டக் கல்லூரிகளில் பயின்றவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய எந்த தடையும் கிடையாது. சட்டக் கல்வியில் சேர வயது வரம்பு நிர் ணயம் செய்யப்பட்டது. பின்னர், அந்த நிபந்தனையை அகில இந்திய பார் கவுன்சில் விலக்கிக் கொண்டது. அதன்படி சட்டப்படிப்பு பயில வயது வரம்பு இல்லை.

இருப்பினும் 35 வயதுக்குப் பிறகு எல்.எல்.பி. பயின்றவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய தமிழ்நாடு பார் கவுன்சில் மறுத்து வருகிறது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானது.

இதேபோல் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளவர்களையும் வழக்கறிஞர்களாக பதிவு செய்ய தமிழ்நாடு பார் கவுன்சில் மறுத்து வருகிறது. குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய வழக்கறிஞர் சட்டத்தில் தடை விதிக்கப்படவில்லை. குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதா கக் கூறி 88 சட்டப் பட்டதாரிகளின் விண்ணப்பத்தை பதிவு செய்யா மல் பார் கவுன்சில் நிறுத்தி வைத் துள்ளது. இவ்வாறு செய்வதற்கு தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது.

இந்த நடவடிக்கைகளால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான எல்எல்பி பட்டதாரிகள் வழக் கறிஞர்களாக பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, தகுதியான சட்டப் பட்டதாரிகள் அனைவரையும் வழக்கறிஞர்களாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசின் தலைமை செயலர், இந்திய பார் கவுன்சில் தலைவர், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் ஆகி யோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x