டெல்டா மாவட்டங்களில் 27, 28 தேதிகளில் மழை வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களில் 27, 28 தேதிகளில் மழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 25, 26 ஆகிய தேதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 27, 28 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 36.8 டிகிரி செல்சியஸ், மிகக் குறைந்த அளவாக உதகையில் 5.4 டிகிரி, நாமக்கல்லில் 16 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in