விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், சிசு உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், சிசு உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாயும் சிசுவும் இன்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால், உறவினர்கள் மருத்துவமனை முற்றுயிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதி நகரைச் சார்ந்தவர் பன்னீர்செல்வம் (40). பட்டாசுத் தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (30). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக முத்துமாரி பிரசவித்து ஆண் குழந்தை பெற்றார். ஆனால், ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு உடல்நிலை கோளாறால் குழந்தை உயிரிழந்தது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கர்ப்பமடைந்த முத்துமாரி பிரசவத்திற்காக கடந்த 22ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தார். இன்று காலை அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தபோது இறந்திருந்தது. அந்த சிசு பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச் சடங்கள் முடிந்த பின்னர், மாலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திரும்பிய பன்னீர்செல்வம் மற்றும் உறவினர்கள் முத்துமாரியை பார்க்கச் சென்றபோது ஊழியர்கள் மறுத்துள்ளனர்.

சற்று நேரத்திற்குப் பிறகு மாரிமுத்துவும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திலும் மருத்துவமனை முன்பும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் எஸ்.பி. மணிவண்ணன், டிஎஸ்பி அர்ச்சனா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

அப்போது, இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதாக தெரிவித்ததால் மறியல் கைவிடப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து விருதுநகர் வந்த டிஜிபி சைலேந்திரபாபுவிடமும் பன்னீர்செல்வம் புகார் மனு அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in