

சென்னை: குடிநீர் குழாய் இணைப்பு பணி நடக்க உள்ளதால் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நாளை காலை 6 மணி முதல் 24 மணி நேரத்துக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளச்சேரி - தாம்பரம் சாலையில் தேசிய காற்று சக்தி நிறுவனம் (NIWE) எதிரே மடிப்பாக்கம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்துக்கான இணைப்பு பணிபிப்.25-ம் தேதி (நாளை) மேற்கொள்ளப்படுகிறது.
நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் 1,200 மி.மீ. விட்டமுள்ள குடிநீர் குழாயுடன், 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் 800 மி.மீ. விட்டமுள்ள குடிநீர் குழாயை இணைக்கும் பணியும் வேளச்சேரி - தாம்பரம் சாலையின் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் நாளை நடக்க உள்ளது.
வெட்டுவாங்கேணி தேவாலயத்துக்கு எதிரே ஒக்கியம் - துரைப்பாக்கம் விரிவானகுடிநீர் வழங்கல் திட்டத்துக்கான இணைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, நெம்மேலி 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 25-ம் தேதி குடிநீர் வழங்கப்படாது. இதனால், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களில் 25-ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் 26-ம் தேதி காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெறசென்னை குடிநீர் வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத, அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மூலமாகவும், தெருக்களுக்கு லாரிகள் மூலமாகவும் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.