

மயிலாடுதுறை: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தரங்கம்பாடி மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தி, இன்ஜின், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் பி.வேல்முருகன்(42). இவர், தனக்குச் சொந்தமான ஃபைபர் படகில்,அதே ஊரைச் சேர்ந்த பி.பாலசுப்பிரமணியன்(39), எம்.அருண்குமார்(27), எஸ்.மாதவன்(36), அ.கார்த்திக்(32), வி.முருகன்(55) ஆகியோருடன் பிப்.21-ம் தேதி இரவு தரங்கம் பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றார்.
இவர்கள் கோடியக்கரைக்கு கிழக்கே 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ரோந்துப் படகில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தரங்கம்பாடி மீனவர்களின் படகில் ஏறி, மீனவர்கள் 6 பேரையும் இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கி, படகில் இருந்த பொருட்களையும் பறித்துச் சென்றனர்.
இதில் காயமடைந்த மீனவர்கள் 6 பேரும் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள், பொறையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து காயமடைந்த மீனவர்கள் கூறியது: இலங்கை கடற்படையினர், எங்களை இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர். பின்னர், படகிலிருந்த மாற்று இன்ஜின், ஜிபிஎஸ் கருவி, தூண்டில், 2 பேட்டரிகள் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இது குறித்து, நாகை மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் காயமடைந்த மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.