Published : 27 Jul 2014 03:20 PM
Last Updated : 27 Jul 2014 03:20 PM

இலங்கை மனித உரிமை மீறல்களை இந்தியாவில் விசாரிக்க பாஜக அரசு ஒத்துழைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினை குறித்து இந்தியாவில் விசாரணை நடத்த வரும் ஐ.நா. குழுவுக்கு, பாஜக அரசு விசா வழங்கி, விசாரணை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸின் மூத்த தலைவருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணை தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை கடற்படையினரின் தவறான அணுகுமுறையால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

ஜூன் மாதம் முதல், இதுவரை 258 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அதில் 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் கூட அவர்களது படகுகளும், உடைமைகளும் இலங்கை அரசின் வசமே உள்ளன.

கடந்த 22ம் தேதி, 43க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளையும், உடைமைகளையும் கைப்பற்றியுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முயற்சியால், இரண்டு முறை இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. மீண்டும் பேச்சு நடத்தி முடிவு காண, தற்போதைய பாஜக மத்திய அரசு வழி வகை செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்கவும், எல்லை தாண்டும் பிரச்சினையை தவிர்க்கவும், மத்திய அரசு இலங்கை அரசுடன், பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்.

இலங்கையில் போரின்போது நடந்த மனித உரிமை மீறல் குறித்து, விசாரிக்க ஐ.நா., மனித உரிமை ஆணையம் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு இந்தியாவில் விசாரணைக்கு வர மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்க வில்லை. இது கண்டனத்துக்குரியது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பாஜக அரசு புறக்கணிப்பதாக உள்ளது.

எனவே, இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினை குறித்து விசாரணை நடத்த வரும் ஐ.நா.,குழுவுக்கு, பாஜக அரசு விசா வழங்கி, விசாரணை நடத்த ஒத்துழைக்க வேண்டும்" என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x