

மாட்டிறைச்சி விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மத்தியில் பாஜக ஆளுகின்றதா அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆளுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாட்டிறைச்சி தடை இஸ்லாமியர்கள், விவசாயிகள் மீது நடத்தப்பட்ட கலாச்சார, பொருளாதார தாக்குதல் என்பதால் இதைக் கண்டித்து வருன் ஜூன் 2-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
பொருளாதார வலிமையுள்ள மாடு வளர்க்கும் தொழிலை நசுக்கி பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
கேரளா, புதுச்சேரி அரசு போன்று மாட்டிறைச்சி விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி கூட்ட வேண்டும்.
பால் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பது மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால், இதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
மே 17 இயக்கத்தினர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து இருப்பது எதேச்சதிகாரத்தை காட்டுகின்றது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் வைக்கும் விவகாரத்தில் சட்டம் என்ன சொல்லுகின்றதோ அதை தமிழக அரசு செய்ய வேண்டும்'' என்றார்.