Published : 25 May 2017 08:29 AM
Last Updated : 25 May 2017 08:29 AM

கல்சா மகாலுக்கு மாறும் பசுமை தீர்ப்பாயம்: திறப்பு விழா ஜூலைக்கு ஒத்திவைப்பு

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு கல்சா மகாலுக்கு மாறுகிறது. இதன் திறப்பு விழா ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சென்னை மாவட்ட அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதில் வழக்குகள் அதிக அளவில் குவிந்ததால், 2-ம் அமர்வும் தொடங்கப்பட்டது. அந்த கட்டிடத்தில் கடும் இட நெருக்கடி நிலவிய நிலையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, தீ விபத்துக்குள்ளான பாரம்பரிய கட்டிடமான கல்சா மகாலை, தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

இதைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை சார்பில் ரூ.16 கோடியில் பழமை மாறாமல் கல்சா மகாலை புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் 27-ம் தேதி பசுமை தீர்ப்பாயம் திறப்பு விழா நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், திறப்பு விழா வரும் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணியிடம் கேட்டபோது, “விழாவுக்கு உச்ச நீதிமன்ற நீதி பதிகளை அழைக்க உள்ளோம். இம்மாதம் முழுவதும் உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை. அடுத்த மாதம் பசுமை தீர்ப்பாயத்துக்கு கோடை விடுமுறை. அதனால் கல்சா மகாலில் பசுமை தீர்ப்பாயம் திறப்பு விழா, வரும் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x