Published : 22 Feb 2023 06:16 AM
Last Updated : 22 Feb 2023 06:16 AM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள க.ரெ. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவரை பொட்டு வைத்து வரக் கூடாது என்று கூறிய தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு முதன்மைக் கல்வி அலுவலர் நசுருதீன் உத்தரவிட்டுள்ளார்.
ஒட்டன்சத்திரத்தில் பழநி சாலையில் க.ரெ. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவரிடம் பொட்டு வைத்து வரக்கூடாது என்று ஆணை உள்ளதாக தலைமை ஆசிரியர் நிர்மலா கூறுவது போலவும், பெற்றோர் உட்பட சிலர்தலைமை ஆசிரியரிடம் முறையிடுவது போலவும் சமூக வலை தளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது.
இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நசுருதீன்,ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி ஆகியோர் சம்பந்தபட்ட தலைமை ஆசிரியரிடம் நேற்றுவிசாரணை நடத்தி, அதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கடிதம் வழங்கினர்.
விளக்கம் கோரப்பட்டுள்ளது: இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நசுருதீன் கூறுகையில், பள்ளி மாணவர்கள் பொட்டு வைக்கக் கூடாது என்று எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை. தலைமை ஆசிரியர்தவறுதலாகக் கூறியுள்ளார். அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!