Published : 22 Feb 2023 04:00 AM
Last Updated : 22 Feb 2023 04:00 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 238 வாக்குச்சாவடி மையங்களில், 5 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1 கட்டுப்பாட்டு கருவி, 1 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்படவுள்ளன. வாக்குப்பதிவானது வரும் 27-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கவுள்ளது.

இந்நிலையில், அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளரைத் தேர்வு செய்யும் வகையில் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை; மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடியில் இருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் காத்திருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்தவுடன், சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், ஓட்டு எண்ணிக்கையை அறிவிக்க மிகவும் தாமதமாகும் என்ற கருத்து எழுந்தது.

இதனால், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. ஒவ்வொரு அறையிலும் தலா 14 மேசை என 28 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. மதியம், 3 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைய வாய்ப்புள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x