

போக்குவரத்து துறையின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம் நிர்வாக சீர்கேடும், ஊழலும் தான் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு அரசின் மெத்தனப்போக்கே முக்கிய காரணமாக உள்ளது. சரியான நிர்வாகம் இல்லாத, அரசினுடைய வெளிப்பாடாக தான் இந்த போக்குவரத்து கழகம் சார்பாக அனைத்து அரசு பேருந்துகள் இயக்கப்படாததற்கு காரணம்.
இதற்கு முக்கிய காரணமாக போக்குவரத்து கழகங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும், ஊழியர்களின் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வுகாண கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும்.
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகை சுமார் 4,500 கோடி உரிய கணக்கில் சேர்க்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகை 1,700 கோடி ரூபாயும், பணியில் உள்ள தொழிலாளர்களின் நிலுவைத் தொகை 300 கோடியும் உடனடியாக வழங்க வேண்டும்.
ஓய்வு ஊதிய திட்டத்தில் 01.04.2003 க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களை சேர்க்க வேண்டும். மாதந்தோறும் ஓய்வு ஊதியம் வழங்குவதற்கு 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
ஓய்வு கால சேமநலத்திட்ட பணப்பலன் நிறுத்தப்பட்டதை நிலுவையுடன் வழங்குவதோடு மட்டுமல்லாமல், அரசுத்துறை ஊழியர்களைவிட போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, குறைவான ஊதியமாகவே உள்ளது. எனவே ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து 50% சம்பள உயர்வு கொடுக்க வேண்டும்.
தினக்கூலி, சேமபணியாளர், தினஊதியம், நிரந்தர பணி, வேலைபளு, பதவி உயர்வு, பணியாளர்களின் எண்ணிக்கை, தண்டனை முறைகள் சம்மந்தமாக கடந்த 12வது ஊதிய ஒப்பந்தகளில் பேசி தீர்க்கப்பட்ட ஒப்பந்த பிரிவுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றி அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் அரசாங்கம் இதுவரைக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய 4,500 கோடி ரூபாய் மற்றும் நிலுவையில் உள்ள 1,700 கோடி ரூபாயும், இதுவரைக்கும் வழங்கப்படவில்லை. தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை உரிய கணக்கில் செலுத்தாமல், இப்பணத்தை போக்குவரத்து கழகங்கள் மற்ற செலவினங்களை செய்துவிட்டு, ஊழலும் செய்து, போக்குவரத்து துறையில் பணிபுரிகின்ற தொழிலாளர்களை வஞ்சித்துவிட்டது.
இந்த அரசு இத்துறையில் முற்றிலும் ஊழல் செய்ததன் விளைவுதான் இன்றைக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படாது என்று தொழிற்சங்கங்கள் சொல்வதற்கு முழுக்காரணம்.
எனவே இந்த அரசை தேசிய முற்போக்கு திராவிட கழகம் வன்மையாக கண்டிப்பதோடு, ஊழல் செய்த இந்த அரசு, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு உடனடியாக அவர்களுடைய பணத்தை வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டும்.
08.05.2017 அன்று 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் கூறினார். 12.05.2017 அன்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஏற்கனவே அறிவித்த 500 கோடி ரூபாயும், மேலும் 250 கோடி கூடுதலாக ஒதுக்கி, 750 கோடி ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்குவதற்காக ஒதுக்கபட்டது பற்றாக்குறையாகவே உள்ள நிலையில், 750 கோடி ரூபாய் ஒதுக்கியதாக அறிவித்தாலும் கூட, இந்த தொகை பட்ஜெட்டில் போக்குவரத்து கழகத்திற்கு அறிவிக்கப்பட்ட தொகையில் இருந்து ஒதுக்கப்பட்டதா, இல்லை கூடுதலாக ஒதுக்கப்பட்ட தொகையா என்று கேட்டபொழுது, கூடுதலாக ஒதுக்கப்பட்ட தொகை என அமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால் பட்ஜெட்டில் இலவச பயணங்களுக்காக ஒதுக்கப்பட்ட 250 கோடியும், வழிவகை முன்பணமாக 124 கோடியும், மொத்தம் 374 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. உண்மையில் அரசு இப்பொழுது கொடுத்துள்ள தொகை 375 கோடி மட்டுமே. அமைச்சர் கூறியபடி தனியாக 750 கோடியோ, அல்லது 500 கோடியோ கூடுதலாக கொடுக்கப்படவில்லை என்பதும், இதேபோல் தான் பேச்சுவார்த்தையில் வலியுறித்திய கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக கூறி, தொழிலாளர்களை இந்த அரசு ஏமாற்றி வஞ்சித்துவிட்டது.
இதனால் தான் தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆளும் அரசு, போக்குவரத்து துறை அமைச்சரும், அதிகாரிகளும், தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கி, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
ஏனெனில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ஏழை, எளிய மக்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை நம்பிதான் பயணம் செய்கிறார்கள்.
இதனால் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து துறையின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம் நிர்வாக சீர்கேடும், ஊழலும் தான்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.