Published : 31 May 2017 09:49 PM
Last Updated : 31 May 2017 09:49 PM
'சுவாதி கொலை வழக்கு' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் சுவாதியின் தந்தை புகார் மனு கொடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி ஐ.டி பெண் பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் தனது வீட்டில் பதுங்கியிருந்த ராம்குமார்(24) என்ற இளைஞரை கடந்த ஜீலை 1-ம் தேதி நள்ளிரவில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் ஜீலை 18-ம் தேதி மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கும் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், 'ஜனனம்', 'உளவுத்துறை' போன்ற படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் ரமேஷ், 'சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுத்து, அதன் முன்னோட்ட காட்சியையும் வெளியிட்டு இருக்கிறார். இதற்கு சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுவும் கொடுத்து இருக்கிறார்.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணனின் நண்பரும், சமூக ஆர்வலருமான பம்மல் சீனிவாசன் கூறுகையில், 'திரைப்படம் வெளியாவதை தடுக்க தணிக்கை குழுவுக்கு மனு கொடுக்க இருக்கிறோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடிவு செய்து இருக்கிறோம்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT