

ஓசூர்: ஓசூர் சானமாவு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி நடந்தது. இதனால், வாகனங்கள் 3 கிமீ தூரத்தை ஊர்ந்து கடந்து செல்லும் நிலை ஏற்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓசூர் வழியாகச் செல்கிறது. இச்சாலை வழியாக கார், பேருந்து மற்றும் கனரக வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்நிலையில், நீண்ட நாட்களாக இச்சாலை புதுப்பிக்கப்படாமல் இருந்ததால், ஆங்காங்கே சிறிய பள்ளங்கள் மற்றும் தார் பெயர்ந்து காணப்பட்டது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஓசூர் பேரண்டப்பள்ளி, காமன் தொட்டி, சானமாவு ஆகிய பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பணி நடக்கும் சாலையில் எதிரும், புதிருமாக வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, ஒரே பாதையில் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதனால், எதிரும், புதிருமாக வரும் வாகனங்கள் இச்சாலையை மெதுவாகக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், வாகனங்கள் சுமார் 3 கிமீ தூரம் அணிவகுத்து நின்று மெதுவாக ஊர்ந்து சாலையைக் கடந்து சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.