Published : 18 Feb 2023 09:08 AM
Last Updated : 18 Feb 2023 09:08 AM

கர்நாடகாவில் தமிழக மீனவர் சுட்டுக் கொலை: விசாரணை நடத்த தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவரை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொலை செய்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கர்நாடக வனத் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் கோவிந்தப்பாடியைச் சேர்ந்த மீனவர் ராஜா கொல்லப்பட்டிருக்கிறார். தமிழகத்திலிருந்து வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் மீது கர்நாடக வனத் துறை இரக்கமற்று, துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தக்க விசாரணை மேற்கொள்ளவும், மீனவர் ராஜாகுடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: இரக்கமே இல்லாமல் தமிழக மீனவர் மீது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்திருப்பது பெருங்குற்றம். இதை மன்னிக்க முடியாது.கடலுக்கு சென்றால் இலங்கை கடற்படையினராலும், காட்டுக்குசென்றால் கர்நாடக வனத்துறையினராலும் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்கதையாவதை அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து தமிழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ராஜா என்ற மீனவர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். ராஜா உயிரிழக்கக் காரணமான கர்நாடக மாநில வனத்துறைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன், உயிரிழந்த மீனவருக்கு இரு மாநில அரசுகளும் நிதி உதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழக - கர்நாடக வனப்பகுதியில் கர்நாடக வனத் துறையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கோவிந்தபாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா உயிரிழந்துள்ளார். தமிழக அரசு உடனடியாக கர்நாடகவனத் துறையினர் மீது கொலைவழக்குப் பதிவு செய்ய வேண்டும்.உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.50லட்சம் நிதியும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x