Published : 18 Feb 2023 08:56 AM
Last Updated : 18 Feb 2023 08:56 AM

ஈரோடு ராஜாஜிபுரத்தில் நாம் தமிழர் - திமுகவினர் மோதல்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி ராஜாஜிபுரம் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற நாம்தமிழர் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு சமூகத்தினர் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட ராஜாஜிபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அன்பு தென்னரசன் என்பவர் தலைமையில் அக்கட்சியினர் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர், சீமானின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களுடன் திமுகவைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து கொண்ட நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அன்பு தென்னரசனின் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, திமுகவினரை கைது செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை கைது செய்யக்கோரி திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்த போலீஸார் இரு தரப்பினரிடமும் புகார்களை பெற்றுக் கொண்டு கலைந்து போகச் செய்தனர். இந்த மோதலில் காயமடைந்த அன்பு தென்னரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x