

தமிழகத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்த புதிய இணையதளத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது: தமிழக அரசு வீட்டுவசதித் துறை கடந்த 4-ம் தேதி வெளியிட்ட அரசாணையில், சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன் பிரிக்கப் பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரைமுறைப் படுத்தும் நோக்கில், புதிய வரைமுறை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதில் விண்ணப்பதாரர்கள் எளிதாக தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ‘www.tnlayoutreg.in’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே பயன்படுத்துபவர் குறியீடு மற்றும் கடவுச்சொல்லை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களின் விண்ணப்ப நிலையை கண்டறியவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்த செலுத்த வேண்டிய கட்டணம், இதர விவரங்கள் இணையதளத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.