

சென்னை: அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை தடுக்கவும் மற்றும் முறையான சுத்திகரிப்பை உறுதிசெய்ய தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் (திருத்தச்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 34/2022) 02.01.2023 முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
இதனடிப்படையில், சென்னை குடிநீர் வாரிய உரிமம் பெற்ற வாகனங்கள் மூலம் மட்டுமே சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டும்.
சென்னை குடிநீர் வாரியத்தின் கீழ்க்கண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் மட்டுமே உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்கள் மூலமாக கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.
எனவே, கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றுவதற்கான உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பெற்று நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், சென்னை குடிநீர் வாரியத்தின் அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் உரிய சட்ட விதிகளின்படி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.