

தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் நேற்று உத்தரவிட்டார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவரான ராஜேஷ் வில்சன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
கோவை சோலையார்நகர் என்ற அடர்ந்த மலைப்பகுதியில் பணிபுரிந்து வருகிறேன். இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) பட்டமேற்படிப்பு ஒழுங்குமுறை விதிகள்-2000 பிரிவு 9(4)-ன்படி, அரசு மருத்துவர்கள் தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் பணிபுரிந்தால் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 சதவீத மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் என உள்ளது.
அதன்படி, நான் 3 ஆண்டுகளாக மலைக்கிராமத்தில் பணிபுரிந்துள்ளதால், ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணோடு எனக்கு 30 சதவீத மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு இதுதொடர்பாக தனியாக வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேட்டில், ‘நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை 90 மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டு, மலைக் கிராமங்கள், தொலைதூர கிராமங்கள், கடினமான பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்த மருத்துவர்களின் முன் அனுபவத்துக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் மட்டும் கூடுதலாக வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளது.
மருத்துவ கவுன்சில் விதிகளின்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேடு சட்டவிரோதம். ஏனெனில், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றினால் எனக்கு 30 சதவீத மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும். எனவே, மருத்துவ கவுன்சில் விதிகள்படி கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, ‘‘மனுதாரரான ராஜேஷ் வில்சனுக்கு ‘நீட்’ மதிப்பெண்ணோடு 30 சதவீதம் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி நடத்த வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேடு இதற்கு பொருந்தாது’’ என கடந்த மாதம் 19-ம் தேதி உத்தரவிட்டார்.
மருத்துவர்கள் போராட்டம்
இதனால், தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி நடத்துவதா அல்லது தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேட்டின்படி நடத்துவதா என்பதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டது.
தனி நீதிபதியின் இந்த உத்தரவால் தங்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் கூடுதல் மதிப்பெண் உள்ளிட்ட மாநில அளவில் வழங்கப்படும் சலுகைகள் பறிபோய் உள்ளதாகக் கூறி அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு மருத்துவர் களான எஸ்.ப்ரீத்தீஸ்வரி, பி.திருநாவுக் கரசு, ஆர்.கோகுல், பி.அருண் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
இந்த வழக்கை கோடை விடுமுறையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் ஆகியோர் கடந்த 2, 3 ஆகிய தேதிகளில் பிரத்யேகமாக விசாரித்தனர். நீதிபதி கே.கே.சசிதரன், ‘‘மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேடு செல்லும்’’ என தீர்ப்பளித்தார். ஆனால் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘‘மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை என்பது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும். எனவே, மருத்துவ கவுன்சில் விதிகள்படிதான் மாணவர் சேர்க்கையை தமிழகத்திலும் நடத்த வேண்டும். மே 7-ம் தேதிக்குள் (இன்று) தரவரிசைப் பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் கலந்தாய்வை திட்டமிட்டபடி நடத்த வேண்டும்’’ என தீர்ப்பளித்தார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் முன்பு கடந்த 2 நாட்களாக மீண்டும் விசாரிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், கே.எம்.விஜயன், வழக்கறிஞர்கள் ஜி.சங்கரன், திலகவதி, ஜி.ஜஸ்டின், பவானி சுப்பராயன், அமர்நாத் ஆகியோரும், அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், அரசு பிளீடர் ஜி.சுப்ரமணியன் ஆகியோரும், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன், வி.பி.ராமன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.சத்தியநாராயணன் நேற்று மாலை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவை நானும் உறுதி செய்கிறேன். ஏனெனில், தமிழக அரசு பிறப்பித்துள்ள விளக்கக் குறிப்பேடு சட்டரீதியாக செல்லாது. பல்வேறு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அதற்கான அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை. எனவே, தமிழகத்தில் முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு மருத்துவத் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகம், இந்திய மருத்துவ கவுன்சில் விதியான 9(4)-ஐ கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அதேநேரத்தில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு சலுகை வழங்க ஏதுவாக மலைப்பகுதி, தொலைதூரம், குக்கிராமம் உள்ளிட்டவற்றை தமிழக அரசே வகைப்படுத்தி வரையறை செய்து கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.