நில அபகரிப்பு புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: நில அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கில் தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன் குமார் மீது பதியபட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in