

நாமக்கல்: விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 120 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தலைமறைவான மர்ம நபர்களை குமாரபாளையம் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குமாரபாளையம் ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் விசைத்தறி உரிமையாளர் மணிகண்டன் (45). இவர் நேற்று இரவு தனது மனைவி திவ்யாவுடன் வெப்படை அருகே உள்ள உப்புபாளையத்தில் பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
தனது இரு குழந்தைகளை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு இருவரும் சென்றுள்ளனர். இன்று காலை குழந்தைகள் இருவரும் பள்ளி செல்வதற்காக வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது கதவு திறந்தும் வீட்டினுள் துணிகள் சிதறியும் கிடந்தன.
இதுகுறித்து மணிகண்டனுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்து பார்த்தபோது வீட்டு பீரோவில் இருந்த 120 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவை மாயமாகியிருந்தது. சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார்.
இதன்பேரில் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீஸார் அங்குள்ள தடயங்களை பதிவு செய்தனர். மேலும், வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குமாரபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.