திருப்பூரில் செல்லா காசானதா ரூ.10 நாணயங்கள்? - வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அவதி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருப்பூர்: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூ.10 நாணயங்களை வாங்க மறுப்பதும், செல்லாது எனக் கூறுவதும், கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பதோ சட்டப்படி குற்றம் எனவும், ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் கடைகள், பேருந்து நடத்துநர்கள் என பல்வேறு தரப்பினரும் ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆ.அண்ணாதுரை கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பேருந்துகளிலும், பல்வேறு கடைகளிலும் ரூ.10 நாணயத்தை வாங்க மறுக்கின்றனர்.

கடந்த 2005-ம் ஆண்டு இந்திய அரசு ரூ.10 நாணயங்களை வெளியிட்டது. அன்று முதலே இந்த நாணயத்தின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தவறியதால், தற்போது இந்நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும், தமிழக அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தகர்களையும் அழைத்துப் பேசி ரூ.10 நாணயத்தை வாங்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூட இந்த நாணயத்தை வாங்க மறுக் கின்றனர். தேவையற்ற அவ நம்பிக்கையுடன் ரூ.10 நாணயங்களை இவர்கள் புறக்கணிப்பதால், தற்போது மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நாணயமாகவே மாறிவிட்டது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, ரூ. 10 நாணயத்தை அனைத்து தரப்பினரும் வாங்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in