மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை வரை அவகாசம்: மேலும் நீட்டிக்கப்படாது என அதிகாரிகள் தகவல்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை வரை அவகாசம்: மேலும் நீட்டிக்கப்படாது என அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நாளை முடிவடைகிறது. நாளைக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலை மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, இலவசம், மானியம் பெறும் மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற மின் நுகர்வோரின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை மின் வாரியம் காலக்கெடுவை நீட்டித்தது. அதன்பிறகு, பிப்ரவரி 15-ம் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று வரை 2.61 கோடி மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். சுமார் 6 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நாளை (பிப்.15) நிறைவடைகிறது.

இதுவே இறுதிக் கெடு. இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என்று மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின்இணைப்பு துண்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்த சிலருக்கு ‘ஆதார் எண் இணைக்கப்படவில்லை’ என்று குறுந்தகவல் வந்துள்ளது. அதேபோல, ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இத்தகையப் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in