

சென்னை: 'இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக, சென்னை மாநகரின் மையப் பகுதியான ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள வாலாஜா சாலையில் சிறுநீர் கழித்தும், குப்பை கொட்டியும் அசுத்தமாக இருந்த பகுதியை மாநகராட்சி நிர்வாகம் நேற்று தூய்மையாக்கியது.
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மாநகரப் பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. அதேபோல மாநகரின் மையப் பகுதிகளான திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஜார்ஜ் டவுன், சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே குப்பை கொட்டப்பட்டும், அறிவிக்கப்படாத சிறுநீர் கழிப்பிடங்களாகவும் காட்சியளிக்கின்றன.
இதனால் மாநகரின் பொலிவு கெடுவதுடன், முதல்வரின் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளுக்கு பலன் கிடைக்காமல் போகிறது. இந்நிலையில் ‘பொது சுகாதார அதிகாரிகளுடன் மேயர், ஆணையர் அவசர ஆலோசனை: சென்னையில் போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தல்' என்ற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
அதில் ‘அறிவிக்கப்படாத சிறுநீர் கழிப்பிடங்கள்' என்ற தலைப்பில் பெட்டிச் செய்தி இடம்பெற்றிருந்தது. இந்த செய்தியின் எதிரொலியாக, மாநகராட்சி நிர்வாகம் நேற்று ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள குப்பையை அகற்றி, பிளீச்சிங் பவுடர் தூவி தூய்மைப்படுத்தியுள்ளது.
இனிவரும் காலங்களில் அந்த இடத்தை தூய்மையாகப் பராமரிக்கும் விதமாக அந்த இடத்தில் சாலையோர பூங்கா அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.