திண்டுக்கல் | கடத்தப்பட்ட கணவரை மீட்டு தரக் கோரி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

திண்டுக்கல் | கடத்தப்பட்ட கணவரை மீட்டு தரக் கோரி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்
Updated on
1 min read

திண்டுக்கல்: கடத்தி செல்லப்பட்ட கணவரை மீட்டுத்தரக் கோரி போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் பெண் ஒருவர் தனது குழந்தைகளுக்கு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

திண்டுக்கல் அருகே வேடபட்டியைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணிராஜ், இவரது மனைவி குழந்தை தெரசு. இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் திண்டுக்கல் அருகேயுள்ள சிறுநாயக்கன்பட்டியில் செங்கல் சூளையில் முன்பணமாக ஒரு லட்சம் பெற்றுக் கொண்டு வேலை பார்த்து வந்துள்ளனர்.

பின்னர் பாதியிலேயே வெளியேறி, திண்டுக்கல் அருகே உள்ள முன்னிலைக்கோட்டை செங்கல் சூளையில் ரூ.2.10 லட்சம் முன்பணம் பெற்றுக்கொண்டு அங்கு வேலை செய்தனர். பின்னர் அங்கிருந்தும் பாதியிலேயே வெளியேறி உள்ளனர். 2 செங்கல் சூளையிலும் வாங்கிய பணத்தை பணி செய்து கழிக்காமலும், திருப்பி தராமலும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் ஜனவரி 18-ம் தேதி அடையாளம் தெரியாத சிலரால் வேளாங்கண்ணிராஜ் கடத்தப்பட்டார். இது குறித்து குழந்தைதெரசு அம்பாத்துரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இதுவரை வேளாங் கண்ணிராஜ் என்ன ஆனார் எனத் தெரியவில்லை.

இதனால் மனமுடைந்த குழந்தைதெரசு, தனது கணவரை விரைவில் கண்டுபிடித்து தரக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தனது குழந்தைகள் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவர்களை தடுத்து காப்பாற்றினர்.

பின்னர் குழந்தைதெரசை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், யாரேனும் தீக்குளிக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை எச்சரித்திருந்த நிலையில், மீண்டும் இச்சம்பவம் நடந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in