

வடபழனி தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த மாநகராட்சி இளநிலை பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை வடபழனி சிவன் கோயில் தெற்கு வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 8-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த கட்டிடம், விதிகளை மீறி கட்டப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்கெனவே சீல் வைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அதிகாரிகள் மெத்தனத்தாலேயே இந்த விபத்து நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தின் வார்டு இளநிலை பொறியாளர் குமரவேல் என்பவரை மாநகராட்சி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இதற்கான உத்தரவு நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள இளநிலை பொறியாளரிடம் விசாரணை நடத்தப்படும். விசாரணை முடிவில் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.