

சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு 67 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கிவருகின்றன.
இதுதவிர சென்னையில் கூடுதலாக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. பட்டப் படிப்பு வரையான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுநிலை படிப்பு, பொறியியல், மருத்துவம் உட்பட தொழில் படிப்பின் தகுதியைசென்னை அல்லது மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும்.
இந்த பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வரவேண்டும். இந்நிலையில் 2023ஜனவரி 31-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநிலவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்து 58,698 ஆகும். அதில் ஆண்கள் 31 லட்சத்து 49,398-ம், பெண்கள் 36 லட்சத்து 9,027-ம் அடங்கும்.
மேலும், மாற்றுத் திறனாளிகளில் ஒரு லட்சத்து 45,481 பேர்வேலைக்காக பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்த பதிவுதாரர்களில் பொறியியல் பட்டதாரிகள் 2 லட்சத்து 93,455 பேர் உள்ளனர். இதுதவிர இடைநிலை ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 76,641 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 37,244 பேரும், முதுநிலை ஆசிரியர்கள் 2 லட்சத்து 51,555 பேரும்,ஐடிஐ முடித்துவிட்டு ஒரு லட்சத்து77,025 பேரும் அரசுப் பணிக்காக காத்திருக்கின்றனர். மேலும், கலைமற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்ற 11 லட்சத்து 24,768 மாணவர்களும் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.