

ஓசூர்: விலை குறைவால், ஓசூர் பகுதி விவசாயிகள் சாலையோரங்களில் முள்ளங்கியை கொட்டி வருகின்றனர்.
ஓசூர் அருகே ஆவலப்பள்ளி, கெலவரப்பள்ளி, நந்திமங்கலம், சென்னசந்திரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் குறுகிய காலத்தில் விளையும் முள்ளங்கி, தக்காளி, கீரை, கொத்தமல்லி உள்ளிட்ட காய்கறி பயிர்களை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடையாகும் காய், கீரைகள் பெங்களூரு, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்குச் செல்கின்றன.
இதில், குறிப்பாக 45 நாட்களில் அறுவடை செய்யும் முள்ளங்கி இப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, முள்ளங்கி மகசூல் அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையான நிலையில், தற்போது, ரூ.3 முதல் ரூ.6 வரை விற்பனையாகிறது.
இதனால், விளை நிலங்களில் அறுவடை செய்யாமல் விவசாயிகள்முள்ளங்கியை அப்படியே விட்டுள்ளனர். மேலும், அறுவடை செய்யும் முள்ளங்கிக்கு உரிய விலை கிடைக்காததால், அவற்றை சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர்.