Published : 05 Jul 2014 10:00 AM
Last Updated : 05 Jul 2014 10:00 AM

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை கோரிய மனு தள்ளுபடி

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், கொலை மற்றும் ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு: இந்தியாவில் சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், கொலை, ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளத்தில் பள்ளி சென்ற சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பொள்ளாச்சியில் காப்பகத்தில் இருந்த 2 சிறுமிகளை கடந்த மே 30-ம் தேதி சமூகவிரோதிகள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தனர். ஆசிட் வீச்சு சம்பவங்களும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இந்த குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்வதுடன் விட்டுவிடுகின்றனர்.

மேல் விசாரணையில் தீவிரம் காட்டுவதில்லை. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலானவர்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்களாகவும், ரவுடிகளாகவும் இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தயங்குகின்றனர்.

பாலியல் தொந்தரவு வழக்குகளில் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க, மாவட்டங்களில் காவல் ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கவும், பலாத்காரம், ஆதாயக் கொலை மற்றும் பலாத்காரம், ஆசிட் வீச்சு வழக்குகளை 6 மாதத்தில் முடிக்கவும், இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர், மனுதாரர் மேலோட்டமாக மனுத்தாக்கல் செய்துள்ளார். பாலியல் வழக்குகளை கையாள ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன. புதிதாக வழிகாட்டுதல்கள் உருவாக்கத் தேவையில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x