ஈரோடு கிழக்கு தொகுதியில் 32 வாக்கு சாவடி பதற்றமானவை: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 32 வாக்கு சாவடி பதற்றமானவை: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அவற்றில் பணிபுரிய 260 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது பணிபுரியும் நுண் பார்வையாளர்களுக்கான முதல்நிலை பணி ஒதுக்கீட்டை தொடங்கி வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி கூறியதாவது: இடைத்தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில், பறக்கும் படை மற்றும் நிலைகண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகை மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மதிப்புடைய பரிசுப்பொருட்களை எடுத்துசென்றால், அவை பறிமுதல் செய்யப்படுகின்றன.

பறக்கும் படையினரின் ஆய்வுபணி மற்றும் பறிமுதல் ஆகியவை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது. வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான விளம்பர செலவினங்களும் கண்காணிக்கப்படுகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதியில், மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளில், 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச் சாவடிகளை கண்காணிக்க, 260 தேர்தல் நுண்பார்வையாளர்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in