

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நேற்று பிரச்சாரத்தை தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஈரோடு மாவட்ட பாஜக அலுவலகம் சென்ற அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, அங்கு நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். இதில், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
குபேர மூலையில் இருந்து.. அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவது நேற்று முன்தினம் உறுதியான நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக, நேற்று காலை அதிமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கினர்.
ஈரோடு மணல் மேடு பகுதியில் உள்ள முருகன் மற்றும் எல்லை மாரியம்மன் கோயிலில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் வழிபாடு செய்துவிட்டு, வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
பிரச்சாரத்தை தொடங்கிய முன்னாள் அமைச்சரும் தேர்தல் பணிக்குழு தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:
எங்களது பிரச்சாரத்தை ஆலய வழிபாட்டோடு, குபேர மூலையில் இருந்து தொடங்கியுள்ளோம். எனவே, எம்ஜிஆர் காலத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதுபோல, ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.