

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனத்தின் கிளையில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால், இதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நெருப்பின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தீயணைப்புத் துறையினரால் உள்ளே செல்ல முடியவில்லை. அதனால் வெளியில் இருந்தே தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.
சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
காலையில் வழக்கமாகப் பணிக்கு வந்த ஊழியர்கள் அனைவரும் பதற்றத்தோடு நிற்கின்றனர். |
சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு செய்து வருகிறார்.
அப்போது பேசியவர், ''கீழ்த்தளத்தில் ஏற்பட்ட தீ, மேல்தளங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. மனிதர்கள் யாரும் விபத்தால் பாதிக்கப்படவில்லை.
கட்டிடத்தின் உள்ளே இருந்த 14 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
அருகிலுள்ள வணிக நிறுவனங்களையும், சிறு கடைகளையும் திறக்கவேண்டாம். வாகனங்கள் எதையும் நிறுத்த வேண்டாம். ஆர்வம் காரணமாக பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வரவேண்டாம்'' என்று ஆட்சியர் அன்புச் செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
படங்கள்: க.ஸ்ரீபரத்