Published : 06 Feb 2023 06:24 AM
Last Updated : 06 Feb 2023 06:24 AM

வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் உயிரிழந்ததற்கு திமுக அரசுதான் பொறுப்பு: பழனிசாமி விமர்சனம்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் சார்பில் கடந்த 4-ம் தேதி இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, வயது முதிர்ந்த 4 பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு செய்துதர வேண்டும்.

இந்த ஆண்டு தைப் பொங்கல் திருநாளுக்கு அரசின் இலவச வேட்டி, சேலையை வழங்கியிருந்தால், இந்த தனியார் வழங்கும் இலவச சேலையை வாங்க ஒரே நேரத்தில் சுமார் 1,500 ஏழை பெண்கள் கூடியிருக்க மாட்டார்கள். கூட்ட நெரிசல் காரணமாக அப்பாவி ஏழை பெண்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கவும் மாட்டார்கள்.

இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத் திறனற்ற இந்த அரசு, இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் செய்த தாமதத்தாலும், அலட்சியத்தாலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குறித்த காலத்தில் இலவச வேட்டி, சேலை வழங்காத திமுக அரசுதான் இந்த அசம்பாவிதத்துக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்போது, எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கையுடன் நடத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x