

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 5 பேரையும், 133 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு நேற்று முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த ஏப்ரல் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து நாட்டுப் படகில் (வல்லம்) மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீனவர்களும் நீதிமன்ற காவலில் உள்ளனர்.
பாரம்பரிய மீன்பிடி முறை மூலம் நாட்டுப் படகுகள் உதவியுடன் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் முயற்சியிலும் பின்னடைவை ஏற்படுத்தும்.
இப்போது இலங்கை வசம் 134 படகுகள் இருக்கின்றன. இலங்கை அரசு மீனவர்களின் படகுகளை விடுவிக்காமல் இருப்பது, அவர்களது வாழ்வா தாரத்தை பாதிப்பதோடு, தமிழக மீனவர்கள் மத்தியில் விரக்தியை உருவாகியுள்ளது.
மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து பரிசீலிப்பதாக இலங்கை அரசு தெரிவித்தாலும், அதுகுறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. அண்மையில் நடைபெற்ற இந்திய, இலங்கை பிரதமர்கள் சந்திப்பின்போதும், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
எனவே, இந்த பிரச்சினையை இந்திய அரசு இலங்கை அரசின் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச்சென்று, தொடர் பாதிப்புக் குள்ளாகிவரும் படகுகளை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள 5 மீனவர்கள் மற்றும் சிறை பிடிக்கப்பட்டுள்ள 134 படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கே.பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.