Published : 04 Feb 2023 03:16 PM
Last Updated : 04 Feb 2023 03:16 PM

“இபிஎஸ் பொறுப்புக்கு அங்கீகாரம் இல்லை; இடைத்தேர்தலில் ‘இரட்டை இலை’ வென்றிட பாடுபடுவேன்” - ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்

சென்னை: "சச்சரவுக்குள்ளான பொதுக்குழுவின் மூலம், தேர்வு செய்யப்பட்ட இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் நியமிக்கப்பட்ட முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வகிக்கின்ற பொறுப்பை உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் அனுமதித்து அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, அதன்பிறகே வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களை பண்ருட்டி ராமசந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது வைத்திலிங்கம் ஓபிஎஸ் சார்பில் அறிக்கை ஒன்றை வாசித்தார். "உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பொருத்தவரை, இந்த இடைத்தேர்தலில் எந்தெந்த கோரிக்கையை மக்கள் முன்னிலையில் நாம் எடுத்து சொன்னோமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.

எதிர்வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக ஒற்றுமையுடன் போட்டியிட வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதற்கு கையெழுத்திட தயார் என்றும் அறிவித்தேன். அதற்கேற்ப இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் என்று கூறியிருந்தேன். அதேபோல், இன்று இரட்டை இலை சின்னத்தின் மூலம் அதிமுக போட்டியிடுகிற வாய்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ளது.

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொது வேட்பாளரை நிறுத்த நான் கையெழுத்திட தயார் என்று அறிவித்தேன். என்னை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டுமல்ல, கட்சியிலேயே இல்லை என்று இபிஎஸ் தரப்பினர் பகையுணர்வுடன் கூறிவந்தனர். இந்தநிலையில், என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும் உள்ளடக்கி எங்களது கருத்துகளைக் கேட்ட பின்னர்தான் பொது வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களை எதிர்த்தோருக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய பொறுப்பு நீடிப்பதற்கு எந்தவித தடையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விதிக்கப்படவில்லை. ஆனால், அதேநேரத்தில் சச்சரவுக்குள்ளான பொதுக்குழுவின் மூலம், தேர்வு செய்யப்பட்ட இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பாளரை நியமிக்கப்பட்ட முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வகிக்கின்ற பொறுப்பை உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை.

இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் வெற்றி சின்னமாம் இரட்டை இலை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்டிக்காத்த இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும் என்னோடு அதிமுக மீது பற்றுக் கொண்ட தொண்டர்களும் மற்றும் என்மீது நம்பிக்கைக் கொண்ட பொதுமக்களும் வெற்றிபெற பாடுபடுவோம்" என்று அதில் ஓபிஎஸ் கூறியிருப்பதாக வைத்திலிங்கம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x