Published : 04 Feb 2023 02:59 PM
Last Updated : 04 Feb 2023 02:59 PM

தமிழகத்துக்கான ரயில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

மதுரை: "தமிழ்நாட்டிற்கான ரயில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரயில் வளர்ச்சி என்பது தேச வளர்ச்சி. வேலை வாய்ப்பு வளர்ச்சியாகும். அதற்கு போடப்பட்ட திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பட்ஜெட் வெளியிடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று காலையில் தான் ரயில் வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய “பின்க்” புக் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் புதிய லைன் திட்டங்களுக்கு இதுவரை வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து நான் விமர்சித்து வந்துள்ளேன்.

புதிய லைன் திட்டங்களான திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை திட்டத்துக்கும், அத்திப்பட்டு - புத்தூர், சென்னை கடற்கரை முதல் மகாபலிபுரம் வழியாக கடலூர் வரையான புதிய லைன் திட்டத்திற்கும், ஈரோடு-பழனி திட்டத்துக்கும் சேர்த்து இந்த ஆண்டு 1057 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எங்களின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ஆனாலும் இந்த தொகை திட்டங்களை முடிக்க போதுமானதல்ல.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு ஆனால் போதுமான நிதி ஒதுக்கப்படாமல் இருந்த மதுரை- அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி திட்டத்துக்கு 114 கோடியும் திண்டிவனம் நகரிக்கு 200 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல திருப்பெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை கூடுவாஞ்சேரி புதிய ரயில் திட்டத்துக்கும் 864 கோடிக்கு 58 கோடியும் ,மொரப்பூர்- தர்மபுரி புதிய லைனுக்கு 100 கோடியும், ராமேஸ்வரம்- தனுஷ்கோடிக்கு 386 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் சற்று கூடுதல் என்ற போதிலும் திட்டத்தை விரைந்து முடிக்க போதுமான நிதி கிடையாது.

அதேபோல இரட்டை பாதை திட்டங்களான ஈரோடு- கரூர் -சேலம் திட்டத்துக்கு 10 கோடியும், கரூர்- திண்டுக்கல், காட்பாடி -விழுப்புரம் திட்டத்திற்கு 30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு குறைந்த ஒதுக்கீடுகள் நடந்தால் இந்த திட்டங்கள் முடிய 20 ஆண்டுகள் ஆகும்.

திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டத்திற்கு 808 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல மணியாச்சி- நாகர்கோவில் ரெட்டை பாதை திட்டம் முடிவடையும் நிலையில் 130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை -மணியாச்சி- தூத்துக்குடி ரெட்டைப்பாதை திட்டமும் முடிவடையும் நிலையில் 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2022 இல் முடிந்திருக்க வேண்டிய மதுரை- மணியாச்சி- தூத்துக்குடி திட்டம்; மணியாச்சி- நாகர்கோவில் திட்டம், திருவனந்தபுரம்- கன்னியாகுமரி திட்டம் அடுத்த ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால், இந்த அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து அறிவித்தாலும் நடைமுறையில் அந்த பணத்தை விடுவிக்காமல் கைவிடும் போக்கும் உள்ளது .எனவே போதிய நிதி ஒதுக்க இந்த அரசை நாம் வலியுறுத்துகிறோம். நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையில் ரயில்வே வளர்ச்சி திட்டங்களுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி வரும் ஆண்டு முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

உண்மையில் சென்ற ஆண்டு பட்ஜெட்டில் பட்ஜெட் ஆதரவு, கடன் ,தனியார் பங்கேற்பு ஆகியவற்றின் காரணமாக 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டது .வரும் ஆண்டு தனியார் முதலீடும் சேர்த்து இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று பட்ஜெட் தெரிவிக்கிறது .இது சென்ற ஆண்டை விட வெறும் 15000 கோடி தான் கூடுதல்.

தேசிய அடித்தள கட்டுமான திட்டமும், தேசிய ரயில் வளர்ச்சி திட்டமும் பற்றி எந்த பேச்சும் கிடையாது. ரயில்வே சரக்கு போக்குவரத்து பங்கு 45 சதமானம் அதிகரிக்கப்படும். சரக்கு வண்டிகளின் சராசரி வேகம் மணிக்கு 25 கிலோமீட்டரில்இருந்து 50 கிலோமீட்டர் ஆக உயர்த்தப்படும். பயணி வண்டிகளின் வேகம் 180 கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்படும். ஆகவே அதற்காக ரயில் வளர்ச்சி திட்டங்கள் போடப்பட்டன.

தேசிய அடித்தள கட்டுமான திட்டம் ஐந்தாண்டுகளில் 14 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் தேசிய ரயில் வளர்ச்சி திட்டம்2021 முதல் 2051 வரை 38.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் மேற்கண்ட லட்சியங்கள் நிறைவேறும் என்று பெரும் திட்டங்களை அறிவித்த மோடி அரசு இப்போது அந்தத் திட்டங்களை கைவிட்டு விட்டது. அதைப்பற்றி எந்த பேச்சும் பொருளாதார ஆய்வு அறிக்கையிலோ அல்லது பட்ஜெட்டில் ஒதுக்கீடோ எதுவும் இல்லை.

வெற்று அறிவிப்பும், பிரமாண்ட தோற்றத்தை உருவாக்கும் அறிவிப்பும் செய்வதே இந்த அரசின் தொடர் வாடிக்கை. அதன் பிறகு அந்த திட்டங்களை கண்டுகொள்வதே இல்லை.

தமிழ்நாட்டிற்கான ரயில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரயில் வளர்ச்சி என்பது தேச வளர்ச்சி. வேலை வாய்ப்பு வளர்ச்சியாகும் அதற்கு போடப்பட்ட திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x