Published : 31 May 2017 05:42 PM
Last Updated : 31 May 2017 05:42 PM
மத்திய அரசின் 3 ஆண்டுகள் சாதனை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இன்று தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக மக்கள் விரோத பாஜக என்று கூறி வருகிறார். நான் கேட்கிறேன் திமுக எந்த மாதிரியான மக்கள் நல திட்டங்களை செய்துள்ளது?
திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு அணையை பெயரிட்டு சொல்ல முடியுமா? பாஜக அரசு செய்துள்ள 3 ஆண்டு சாதனைகளை பட்டியலிட முடியும். விவாதிக்க ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா? நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பசுவதை விவகாரத்தைப் பொறுத்தவரை மாட்டிறைச்சி விற்கவோ யாரும் உண்பதற்கோ தடை விதிக்கப்படவில்லை. தவறுதலாக மாட்டிறைச்சிக்கு தடை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். பால் தரும் பசுக்கள் கேரளாவிற்கு கடத்தப்படுகின்றன.
ரூ.2 ஆயிரம் கோடிக்கு சட்ட விரோதமாக மாடுகள் கடத்தப்படுகின்றன. இதைத் தடுப்பதற்காகவே புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை அரசியலாக்க வேண்டாம்'' என்று தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT