Published : 03 Feb 2023 07:26 AM
Last Updated : 03 Feb 2023 07:26 AM

சித்த மருத்துவ படிப்புகளுக்கு பிப்ரவரி 11 முதல் 2-ம் கட்ட கலந்தாய்வு

சென்னை: சித்த மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு 5 அரசு கல்லூரிகள் உள்ளன. அதில் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. அதேபோல, 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்கள் உள்ளன. இதில் 1,469 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும், 521 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. இந்த கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு ஆகிய இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசு நடத்தியது.

முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், அரசு கல்லூரிகளில் 61 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், சுயநிதி கல்லூரிகளில் 350 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 127 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் 503 நிர்வாக ஒதுக்கீடு என மொத்தம் 1,041 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ம் தேதி சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் பங்கேற்கலாம். மேலும், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 15-ம் தேதி சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்யலாம். மேலும் விவரங்களை https://tnhealth.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் என இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x