Last Updated : 02 Feb, 2023 07:49 PM

 

Published : 02 Feb 2023 07:49 PM
Last Updated : 02 Feb 2023 07:49 PM

மதுரை சிறை நூலகத்திற்கு 300 புத்தகங்கள் வழங்கிய 92 வயது நெசவுத் தொழிலாளி: சிறை அதிகாரிகள் பாராட்டு

சிறை நூலகத்திற்கு புத்தகங்கள்வழங்கிய 92 வயது நெசவுத் தொழிலாளியை சிறை அதிகாரிகள் பாராட்டினர்.

மதுரை: மதுரை சிறை நூலகத்திற்கு 300 புத்தகங்கள் வழங்கிய 92 வயது நெசவுத் தொழிலாளி ''புத்தகங்களை சரியான இடத்தில் சேர்க்கவே விரும்பினேன்'' என்று கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்த பல சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை விற்க உருவாக்கிய சிறை அங்காடிகள் செயல்படுகின்றன. சிறைக்குள் ஸ்டேஷனரி பொருட்கள், நெசவு, விவசாய உற்பத்தி என, பல பணிகளை சிறைவாசிகள் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை புழல் சிறையைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையிலும் கைதிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக நூலகம் ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இந்நூலகத்திற்கு சுமார் 1 லட்சம் புத்தகங்களை பெறவேண்டும் என, இலக்கு நிர்ணயித்து பல்வேறு தரப்பிலும் இருந்து இலவசமாக நூல்களை பெறும் முயற்சியில் டிஐஜி பழனி, கூடுதல் சிறை கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு, கைதிகளின் வாசிப்புக்கென நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இது குறித்த செய்தியை படித்த மதுரை கூடல்நகர், ரயிலார் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த 92 வயது முதியவரான பாலகிருஷ்ணன் (நெசவுத் தொழிலாளி)சிறை நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ''தன்னிடம் உள்ள சுமார் 300 புத்தகங்களை இலவசமாக சிறை நூலகத்திற்கு வழங்க விருப்புகிறேன். வயது முதிர்வால் நேரில் கொண்டு வந்து கொடுக்க இயலாத நிலையில், வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்'' என, கூறியிருந்தார்.

இதன்படி, நேற்று உதவி சிறை அலுவலர் ஜவகர் மற்றும் மத்திய சிறை மதுரை நல அலுவலர்கள் சரவணகுமார், நடராஜன் ஆகியோர் பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்றனர். அவரிடம் இருந்து ஆன்மிகம் உள்ளிட்ட 300 புத்தகங்களை பெற்றுச் சென்றனர். வயதான காலத்திலும், சிறை கைதிகளுக்கான நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கிய பாலகிருஷ்ணனை சிறைத்துறை நிர்வாகம் பாராட்டியது.

பாலகிருஷ்ணன் கூறியது: ''வள்ளலாளர் கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டு, அது தொடர்பான ஏராளமான புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அடுத்து ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை வாங்கி, வீட்டில் நூலகம் ஒன்றை பராமரித்தேன். புத்தகங்களே எனது சொத்து. பொழுதுபோக்கு. வெளியில் யாரை பார்க்கச் சென்றாலும், என்னை பார்க்க வருவோருக்கும் புத்தகமே பரிசாக அளிப்பேன். விரும்பி கேட்கும் நபர்களுக்கு இலவசமாக புத்தகங்களை கொடுப்பேன்.

இதுவரை சுமார் 1500 புத்தகங்கள் படிக்க கொடுத்துள்ளேன். இது தவிர, எஞ்சிய புத்தகங்களை பராமரித்து வந்தேன். வயதான நேரத்தில் இப்புத்தகங்களை சரியான இடத்தில் சேர்க்க வேண்டும் என, விரும்பினேன். இந்த நேரத்தில் மதுரை சிறை நூலகம் பற்றி தகவல் தெரிந்து, என்னிடம் இருந்த 300 புத்தகங்களை சிறைவாசிகள் படித்து, பயன்பெறும் வகையில் வழங்கியுள்ளேன். சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரியின் இத்திட்டம் வரவேற்கத்தக்க சிறப்பானது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x