Published : 02 Feb 2023 07:44 PM
Last Updated : 02 Feb 2023 07:44 PM

சென்னையில் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழித்தால் அபராதம்: மாநகராட்சி ஆலோசனை

சென்னை: திறந்தவெளி கழிப்பிடம் அற்ற பகுதியாக சென்னையை அறிவிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், பொது இடங்கள், நீர்நிலையோரங்களில், சிறுநீர், மலம் கழித்தால் 100 ரூபாய் அபராதம் விதிப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 866 இடங்களில், 7,471 கழிவறைகள் உள்ளன. இந்த கழிவறைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், ஒரு சிலர் கழிவறைகளை ஆக்கிரமித்து, கட்டணம் வசூலித்து வந்தனர். எனவே மாநகராட்சி சார்பில், கழிவறைகளை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது போலீஸில் புகாரளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 100-க்கும் மேற்பட்ட கழிவறைகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட கழிவறைகள் இடிக்கப்பட்டு அங்கு புதிதாக நவீன முறையிலான கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஏற்கெனவே உள்ள கழிவறைகளையும், மீண்டும் சீர்படுத்தி பயன்படுத்தும் பணியையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 37 இ–கழிவறைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 107 இ–கழிவறைகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதைதவிர, சென்னையில், பேருந்து நிறுத்தங்கள், சந்தை பகுதிகள், மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகள், குடிசைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் புதிதாக 358 ஆண், பெண் என, இருபாலர் பயன்படுத்தக்கூடிய நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ, 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவறை வசதிகளை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், திறந்தவெளி கழிப்பிடம் அற்ற பகுதியாக சென்னையை அறிவிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், பொதுஇடங்கள், நீர்நிலையோரங்களில், சிறுநீர், மலம் கழித்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்க மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் தனியார் பங்களிப்புடன், மாநகராட்சி கழிவறைகள் பராமரிக்கப்பட உள்ளது. மேலும், தேவையான இடங்களில் 24 மணி நேரமும் கழிவறைகள், துாய்மையான பராமரிப்பில் செயல்படும். அதேபோல், வேறு எந்தெந்த பகுதிகளுக்கு, எத்தனை கழிவறை தேவை என்ற விபரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அங்கெல்லாம் விரைவில் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.

எனவே, சிறுநீர் மற்றும் மலம் கழிக்க கழிவறைகளை மட்டுமே, பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். மீறி, பொது இடங்களில், இயற்கை உபாதைகளை கழித்தால், அவர்களுக்கு காவல்துறை அல்லது மாநகராட்சி பணியாளர்கள் வாயிலாக 100 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், சுகாதார துாதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வாயிலாகவும் அபராதம் விதிக்கலாமா என ஆலோசித்து வருகிறோம்.

மாநகராட்சி கழிவறைகளில் கட்டணம் வசூலித்தால் யாரும் கொடுக்க வேண்டாம். சம்பந்தப்பட்டவர்கள் மீதோ அல்லது குறிப்பிட்ட கழிவறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றோ, சென்னை மாநகராட்சி மேயர் அல்லது கமிஷனருக்கு தபால் வாயிலாகவும் 1913 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம். உடனடியாக சம்பந்தப்பட்ட கழிவறை மீட்கப்பட்டு, ஆக்கிரமித்தவர்கள் மீது போலீஸில் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாநகராட்சி நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x